சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்

சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்

237. பிடித்த தண்டும் உம்மதோ? பிரம்மமான பித்தர்காள்.
தடித்த கோலம் அத்தை விட்டு , சாதி பேதம் கொண்டீரோ?
வடித்திருந்த ஓர் சிவத்தை வாய்மை கூற வல்லீரேல்,
திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடலாகுமோ?

பிரம்மம் என்றால் இந்த பிரம்மாண்டமான பேரண்டம், அதன் அத்தனை பொருட்களும் , ஆற்றல்களும் , உயிர்களும், சேர்ந்த அனைத்தும் தான்.
மனிதனும் பிரம்மத்தின் கூறுதான். அப்படி உன் பிடித்த தண்டின் மூலமாக உற்பத்தி ஆகும் உயிர்களும் பிரம்மத்தின் கூறுதான்.
அது நம்முடையது அல்ல. பிரம்மமான பித்தர்காள் இதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.
கண்ணுக்குத் தெரியாத உயிர் அணுக்களில் இருந்து தடித்து அந்த நாதம் விந்து பிரம்மத்தின் உதவியில் குழந்தையாகி வளர்ந்து மனிதர்களானவர்களை சாதி பேதங்களாக பிரித்து கொள்கிறீர்களே இது முறையில்லை என்கிறார்.
இந்த பல வடிவங்களாக , மனிதர்களாக இருப்பவை அனைத்தும் அந்த ஓர் சிவம்தான் . அந்த வாய்மையை நினைத்து அதைத்தான் அனைவருக்கும் கூறி புரிய வைக்க வேண்டும்.
அப்படி செய்யாமல் எப்படி அந்த திடுக்கமுற்ற ஈசனைச் சேர்ந்து கூட முடியும் என கேட்கிறார். திடுக்கமுற்ற ஈசன் என்றால் இந்த பிரம்மாண்டமான அனைத்தும் ஈர்த்தல் எனும் பேராற்றலால் இயங்கிக் கொண்டு உள்ளதைத் தான் அப்படிக் கூறுகிறார். அதுதான் திடுக்கமுற்று என்றால் வெடித்து சிதறி மீண்டும் ஈர்த்துக் கொண்டு இருக்கும் ஈசனை சென்று கூட வேண்டும் என்றால் சாதி பேதம் நம் மனதில் கலைந்து இனக்கமாக இயற்கையுடன் இயைந்து ஆனந்தமாக வாழ்ந்து பிறவாமை பெற்று அவனை ஈசனை கூட வேண்டும் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *